Monday, May 3, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் (கவிஞர் கே.ஸ்டாலின் )

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்


கவிஞர் கே.ஸ்டாலின்
பயணவழிக்குறிப்புகள் என்கிற முதல் கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு, எட்டாண்டு இடைவெளியில் கே.ஸ்டாலின் அவர்களுடைய இரண்டாவது தொகுப்பான ‘பாழ்மண்டமொன்றின் வரைபடம்' வெளிவந்திருக்கிறது.காட்சிகளின், நிகழ்வுகளின் கவித்துவ சிந்தனைப் பதிவுகளே ஸ்டாலின் கவிதைகள்.மிகுபுனைவு, திருகல்மொழி, அனாவசியமான இறுக்கங்கள் ஆகிவற்றைத் தகர்த்து எளிய வாசகரையும் சென்றடையும் வகையில் வெட்டவெளிச்சமாய் தன்னை முன்னிறுத்துபவை இவரது கவிதைகள். நிராயுதபாணியாய் நின்று வெற்றிவாகை சூடக்கூடியவை.ரசனை மிகுந்தவை.

படித்து முடித்ததும், நன்றாக இருக்கிறது என்ற ஒரு சிறிய தீர்மானத்தை மட்டுமே நிகழ்த்திவிட்டு நெஞ்சைவிட்டு அகன்றுபோகும் கவிதைகளைப்போலல்லாமல் ,

பேருந்தின் மேல்கம்பியை
பிடித்து வந்த
அழகான மருதாணி
விரல்களுக்குரிய
முகம் தேடி
தவிப்பும் துக்கமுமாய்

என்கிற இவரின் கவிதை வரிகளைப்போல் மனதில் நின்று தாக்கம் நிகழ்த்தக்கூடிய வல்லமை பெற்றவை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். ‘டிஷ் ஆண்டனாவின் நிழலில் எங்கள் கிராமம்' என்கிற கவிதைத் தலைப்புக்குள்ளேயே வைத்திருக்கும் பொறியைப் போன்று, காலமாற்றத்தில் ஏற்படும் சீரழிவுகளையும், சிதையும் தொன்மங்களையும், அதே சமயம் எவ்வளவுதான் மாற்றம் கண்டிருந்தாலும் இன்று வரை மாறாத சில அவலங்களையும் சுட்டிக்காட்டும் கவிதைகள் உள்ளன.( கணேஷ் தியேட்டர்..)

இவரது கவித்துவமான கற்பனைவளம் அலாதியானவை.தொகுப்பு முழுதும் விரவிக்கிடந்து ரசிக்கத்தக்கவையாகவும், வியப்பளிக்ககூடியதாகவும் அமைந்துள்ளது.

நீ நடந்து வரும் பாதையில்
முகத்தைச் சந்திக்கும் நேர்க்கோட்டு வெற்றிடங்களெல்லாம்
கனவெளிகளில்
பூச்சொரிகின்றன.., என்கிற வரிகள் மற்றும்

அசைவின்மை நோக்கி
அசைந்தபடியிருக்கிறது
நீ எழுந்துசென்ற பின்னும்
உன்னைச் சுமந்திருந்த ஊஞ்சல் .., என்கிற வரிகள் உதாரணம்.

பிணம் தின்னும் தேவைதைகள்,பட்டுத் துணியிலிருந்து உயிர்த்தெழும் பட்டுப்பூச்சிகள்,’அப்போதுதான் வெட்டியெடுக்கப்பட்ட குழந்தையின் ஓர் உறுப்போ ‘என்பன போன்ற வரிகள் மறக்கமுடியாதவை.

கவிதை அழகிய பொய்களாலானது. நிறுவப்பட்ட கணிதச் சமன்பாடுகளையே, சமனற்றவையாக ஆக்கும் அழகிய பொய் கொண்ட வித்தியாசமானவொரு கவிதைத் தலைப்பு (a+b)2 ...

ஒரு கவிதையின் வீச்சு என்பது, அது வாசகனுக்குள் நிகழ்த்தும் தாக்கத்திற்கு நேர்விகிதத்தில் அமைந்திருக்கும்.இக்கூற்றை ஒரு கவிதையாக விளக்குவதாகவும், அதேசமயம் பொருத்தமான சாட்சியாகவும் விளங்கும் இவரது கவிதை..

வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு.

என்கிற கவிதையைச் சொல்லலாம்.

நகுலனுக்கு சுசீலா போல், இவருக்கு நித்யா.கவிஞரின் அன்புக்குரிய பாத்திரம்.காதலியாகவோ, மகளாகவோ,கற்பனையாகவோ எப்படியும் இருக்கலாம். காதல் கவிதைகள் என்று உணரத்தக்க நிறைய கவிதைகள் உள்ளன.ஆசிரியராகப் பணிபுரிவதாலோ என்னவோ, பரவலாக இவரது கவிதைகளில் குழந்தைகளின் உலகம் காணக்கிடைக்கிறது.

ஒரு தொகுப்பைப் பற்றி எழுத நேர்கிற சந்தர்ப்பத்தில், உண்மையான உற்சாகத்தோடும், தைரியமாகவும் கொண்டாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகிற வகையில் இத்தொகுப்பு இருக்கிறது என்று சுருங்கச் சொல்லலாம். இப்படி எழுத நேரிடுவதில் இருக்கும் சுதந்திரமும், நேர்மறையான சாதகங்களுமே எழுதுகிற எனக்கு உற்சாகமளிக்கிறது. தொகுப்பில் எதன் பொருட்டும்,செய்த கவிதைகளே இல்லாமல் அகத்தூண்டலில் உந்தப்பட்டு படைப்பூக்கத்துடன் எழுதப்பட்ட அசலான கவிதைகள் நிறைந்திருக்கும் தொகுப்பு இது.

கவிஞர் கே.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம்,திருவரங்கம் அஞ்சல் கள்ளிப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாழ்மண்டமொன்றின் வரைபடம்- கவிதைகள்

குழந்தைகளைக் குளிப்பாட்டும் விரல்கள்

குழந்தைகளைக்
குளிப்பாட்டும் விரல்கள்
எப்போதும்
சொர்க்கத்தின் சாவிகளை
சுழற்றியபடியிருக்கின்றன

பூத்தொடுப்பதும்
குழந்தைகளைக்
குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்
இரண்டிற்குப் பின்னரும்
விரல்கள் வாசம் பெறுகின்றன

வன்முறைக்குப் பழகிய
விரல்களை
குழந்தைகளின் மென்தேகம்
மெல்ல மெல்ல
மிருதுவாக்கி விடுகிறது

கூச்சத்தின்
முதல் கீற்று விழும் வேளை
மறுதலிக்கும் குழந்தைகளுக்கு
உங்கள் விரல்கள்
உடைந்த
விளையாட்டு பொம்மைகளாகின்றன

ஆற்றில்
தானே குளீக்கும் குழந்தைகள்
எந்த விரல்களையும் யாசிப்பதில்லை
அவர்களைத் தழுவிச் செல்லும் தண்ணீர்
தூரத்தில் துணீ துவைத்துக்கொண்டிருக்கும்
மலடி ஒருத்தியின் விரல்களை
குளிப்பாட்டிச் செல்கிறது

***

இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா

***

தலைக்காயத்திலிருந்து
வழியும் உதிரமென
முகம் நனைக்கின்றன
உன் பிரியங்கள்
பாதுகாப்பெனக் கருதி
விழிகளை மூடிக்கொண்ட பின்னரும்
உதடுகளில் பட்டுக்
கரிக்கிறது
அதன் உதிரச் சுவை

***

அப்பாவின் டெய்லர்

அளவு சட்டையெல்லாம் வேண்டாம்
துணியை மட்டும்
கொடுத்துட்டு வா- என்பார் அப்பா
காதிலிருக்கும் பேனாவால்
புதுத்துணீயின் மூலையொன்றின்
கைகள் தோள்பட்டை
உடலின் அளவுகளை
மனப்பாடமாய் எழுதுவார்
அப்பாவி பிரத்யேக டெய்லர்
ஆயத்த ஆடைகள்
அறிமுகம் ஆகும் முன்னர்
உள் பாக்கெட் வைக்காமல்
இவர் தைத்த ஆடைகளை
சிறுவயதில் அணியாமலேயே
அடம் பிடித்திருக்கிறேன் நான்
விபத்தொன்றில்
உடல் நசுங்கி அப்பா இறக்க
அடையாளம் காட்டியது
காலருக்குப் பின்னிருந்த
எஸ்கே என்ற குறியீடுதான்
பெரிதாக்கப்பட்ட முகத்தையே
சில ஆண்டுகளாய்
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க
இன்னமும்
இவர் நினைவுகளில்
வாழ்ந்துகொண்டிருக்கூடும்
அதே நீள அகலங்களுடன் அப்பா.

***

தனிமை

மரத்தடியில் விளையாடிய சிறுவர்கள்
வீடு திரும்பினர்
வீடு திரும்புதலென்பது
விளையாட்டின்
எந்த விதிகளுக்குட்பட்டதென்ற
விளங்காத குழப்பத்தில்
வெயிலை வெறித்தபடியுள்ளது
நிழல் மட்டும் தனித்து

வளர்ந்த குழந்தைகளை பார்த்தபடியிருக்கும்
உடைந்த பொம்மைகளின்
இமையா விழிகளில்
உறைந்திருக்கும்
உலகத்துத் தனிமையின்
உச்சபட்ச அவஸ்தை
***

பாழ்மண்டமொன்றின் வரைபடம்- கவிதைகள்

கே.ஸ்டாலின்
வம்சி புக்ஸ்,
19.டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை
9444867023,944322297

விலை ரூ.50.

நன்றி- தடாகம்
அகநாழிகை- சமூக, கலை ,இலக்கிய இதழ்.

3 comments:

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா பகிர்ந்திருக்கீங்க முத்து

தேர்வுகள் அருமை

லைட் ரீடிஙுக்கு நந்தலாலவும்
கொஞ்சம் சிரத்தை வேண்டும்
கண்டராத்தித்தனும் கொஞ்சம் பகிருங்களேன் :)

யாத்ரா said...

ரொம்ப நல்ல பகிர்வு முத்து, ரொம்ப நல்ல கவிதைகள், பரவசம் பரவசம், வாங்கிப் படிக்கணும், அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

எல்லாமே நல்லாருக்கு