Wednesday, January 27, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-தபசி

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்

கவிஞர் தபசி
*சொற்களின் எளிமையைப் புறந்தள்ளிவிட்டு தன்னைச் சுற்றி ஒரு மாயவலையைப் பின்ன ஆரம்பித்த தருணமே நவீன தமிழ்க்கவிதையின் வீழ்ச்சி நிலை.
*கவிதையின் பிரதான அம்சங்களாக நான் காண்பது நேரடித்தன்மை,எளிமை மற்றும் உண்மை.ஒரு உண்மையை எளிமையன்றி வேறு எந்த விதத்திலும் வெளிப்படுத்தமுடியாது என்பதே உண்மையாகும்.
-தபசி

                       பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவும், ஏழு கவிதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ளவர் கவிஞர் தபசி.தபசியைப் பற்றின பரவலான அறிமுகம் நம் தமிழ்ச்சூழலில் இல்லை என்பது என் தனிப்பட்ட கணிப்பு.இது எந்த அளவுக்கு ஆச்சரியமானதோ, அதைவிட வருத்தமளிக்கக்கூடியது.இதற்குச் சான்றாக, இணையத்தில் தபசியின் பெயரில் தேடினால் கிடைக்கும் விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்கு அமைந்துள்ள பதிவுகளே போதும்.

                       கவிதைக்கென நாம் ஒரு தனித்துவமான, மொழியமைப்பை வரித்துக்கொள்கிறோம். சராசரி பேச்சு மொழியிலிருந்து அன்னியப்பட்டு நிற்கக்கூடியது இது.மாறாக, சராசரி பேச்சு மொழியில் கவிதைகளை எழுதிவிடும்போது, அவற்றை கவிதைகளாக ஏற்க நாம் தயக்கம் காட்டுகிறோம் என்றே படுகிறது.ஆனால், கவிதை என்பது தீவிரமான முதிர்ச்சி கொண்ட மொழியமைப்பில் வெளிப்படுத்தப்படுவது மட்டுமேயல்ல என்பதே உண்மை.கவிஞர் தபசியின் பெரும்பாலான கவிதைகள் நேரடியான பேச்சு வழக்கிலுள்ள, எளிய சொற்களாலேயே எழுதப்பட்டுள்ளது. இவரின் சொற்பிரயோகங்களிலிருக்கும் எளிமையும், நேரடித்தன்மையும் கவிதை உணர்த்த விரும்புவதற்கான பொருளோடு நேரடித்தொடர்பு கொண்டதல்ல.அதை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடாது. அது, பிறிது மொழிந்து,விரிந்துகொண்டே செல்லும் அடர்த்தி கொண்டது. சொன்ன சொற்களிலிருந்து பெருகும் சொல்லப்படாத சொற்களே இங்கு கவனிக்கத்தக்கது.இதுவே, இவரின் கவிதைகளை அணுகுவதற்கான வழியாக நான் குறிப்பிட விரும்புகிறேன்.நவீன இலக்கியம் என்பதே வாசிப்பில் தேர்ச்சியைக் கோருவது.இல்லாமல்போனால், நிறைய படைப்புகள் வெறுமையானதாகத் தோன்றிவிடக்கூடும்.

ஒரு வசந்தத்தின் பாடலென்பது/எங்கோ/எப்போதோ/ஒலிப்பதன்று அது/இங்கே/இப்போது/ஒலித்துக்கொண்டிருப்பது என்று அமைந்துள்ள இவரின் ஒரு கவிதையின் சில வரிகளைப்போல், இவர் கவிதைகள் இயங்கும் தளம் சராசரியான, அன்றாட வாழ்விலிருந்து, உலகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட நிகழ்வுகளும், காட்சிகளுமே.

இவரின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் அங்கதச்சுவையும், கேலியும்.வாய்விட்டும் சிரிக்கும் அளவுக்கு அங்கதம் கொண்ட கவிதைகள் நிரம்ப உள்ளன.சமூகத்தின் மீதான விமர்சனத்தை இவர் அங்கதச்சுவையோடு கேலி செய்கிறார். நேரடியான , மறைமுகமான அரசியல் கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். விட்டு விலகிடும் நிலை பற்றி நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார்.தொன்மத்தையும், நவீன வாழ்வையும் இணைத்துப்பார்த்து அங்கதம் தெறிக்க எழுதுகிறார்.கடவுளும் டாஸ்மாக்கும் போன்ற படிமமெல்லாம் உதாரணம். வித்தியாசமான சொல்முறைகளை கவிதைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.

தபசி - சில குறிப்புகள்

இயற்பெயர் சங்கர்.திருக்கோயிலூரில் பிறந்த இவர் தற்போது திருச்சியில் வசிக்கிறார்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் தபசி, மத்திய கலால் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.இவரது சில கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் கவிதைத் தொகுப்புகள்

1.ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்(1994),
2.இன்னும் இந்த வாழ்வு(2000)
3.தோழியர் கூட்டம் 2003,
4.ரசிகை(2003)(மோகனா பதிப்பகம்)
5.மயன் சபை
6.குறுவாளால் எழுதியவன் 2004( சந்தியா பதிப்பகம்)
7.காதலியர் மேன்மை(2007),(அம்ருதா பதிப்பகம்)

நீள நீளமான கவிதைகளாக இருப்பதால் சிலவற்றை மட்டுமே அளிக்கிறேன்.

ஞானம்


சித்தார்த்தனைப் போல்
மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு
நடுராத்திரியில்
வீட்டைவிட்டு
ஓடிப்போக முடியாது என்னால்

முதல் காரணம்
மனைவியும்,குழந்தையும்
என்மேல்தான்
கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்
அவர்கள் பிடியிலிருந்து
தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல

அப்படியே தப்பித்தாலும்
எங்கள் தெரு நாய்கள் எமன்கள்
லேசில் விடாது
என்னைப் போன்ற
அப்பாவியைப் பார்த்து
என்னமாய் குரைக்கிறதுகள்

மூன்றாவது
ஆனால்
மிக முக்கியமான காரணம்
ராத்திரியே கிளம்பிவிட்டால்
காலையில்
டாய்லெட் எங்கே போவது
என்பதுதான்.

நண்பர்கள்

கடவுளும் சாத்தானும்
சந்தித்துக்கொண்ட ஒரு மாலை வேளை

கடவுள் கையில் பால் டம்ளர்
சாத்தானிடம் சாராய பாட்டில்

ஆரம்பித்தது சாத்தான்
“ என்ன சாமி...எப்படி இருக்கீங்க...
எங்கப் பாத்தாலும் உங்க பேருதான்...
திருப்பதி, திருத்தணி, பழநின்னு வசூலை
அள்ளிக்கொட்றீங்களே...”

“அட போப்பா...”
அலுத்துக்கொண்டார் கடவுள்,
“என்ன இருந்தாலும்
டாஸ்மாக் வருமானத்துக்கு
ஈடாகுமா நம்ப வருமானம்..”

சாத்தான் விடுவதாயில்லை
“ என்ன குருவே...அப்படிச் சொல்லிட்டீங்க...
தேர்,திருவிழா,தெப்பம்னு உங்களுக்குத்தானே
எல்லாக் கொண்டாட்டமும்...”

“ நீதானே மெச்சிக்கணும்..எந்தப் பேப்பரை பாரு...
உன்னோட ராஜ்ஜியம்தான்...
கள்ளக்காதல்,கற்பழிப்பு,
கொலை,குண்டுவெடிப்புன்னு
பூந்து விளையாடுறியே தம்பி..”

சாத்தானுக்குக் கூச்சமாகப் போய்விட்டது
அதற்குள்
பாலை காலி செய்துவிட்டிருந்தார் கடவுள்

“என்ன பிரதர்...அதுக்குள்ள முடிச்சிட்டீங்க...
வேணும்னா இதைக் கொஞ்சம் டேஸ்ட்
பண்ணிப் பாக்கறீங்களா...”
“ஒன்னும் பண்ணாதில்ல...ஒன்னும்
பண்ணாதுன்னா கொஞ்சூண்டு ஊத்து பாப்போம்.”

நண்பர்


நேராய்ப் பேசும்போது
புத்திசாலி

தொலைபேசி உரையாடலில்
அசடு

மனைவியிடம் பேசும்போது
(எப்போது பேசினார்)
பயந்தாங்கொள்ளி

பிள்ளைகளிடம்
கோமாளி

அதிகாரியின் அதட்டலுக்கு
மௌன சாமியார்

பேச்சுதான்
அவருக்குப்
பிரச்னையே

இந்தக் கணத்தில்


எல்லாவற்றையும் கடந்துவிடு
உன்முன் இருக்கும்
வீடு, மனைவி, மக்கள்
பணம்,பதவி,பவிசு,
நட்பு, சொந்தம், பந்தம்
புகழ், அதிகாரம்,ஆணவம்,
அறிவு, திமிர், நடிப்பு,
பேச்சு,சிரிப்பு,அழுகை,
வாழ்க்கை,மரணம்,கண்ணீர்...
எல்லாவற்றையும்.
ஒரு நொடியில் நிகழவேண்டும் இது.
காத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை.

(குறிப்பு- ரசிகை, குறுவாளால் எழுதியவன் மற்றும் காதலியர் மேன்மை ஆகிய திகுப்புக்களை மட்டுமே வைத்து எழுதப்பட்டிருப்பது இது)
நன்றி- தடாகம்
Thadagam_Logo_Eng

Thursday, January 21, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-மு.ஹரிகிருஷ்ணன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்

image

மு.ஹரிகிருஷ்ணன்

மொழிவழி பிரிந்து கிடக்கின்றன மாநிலங்கள்.தமிழகத்திலேயே பலவிதத் தமிழ் நிலவுகிறது. வட்டாரம் சார்ந்த வழக்குப்பேச்சும், ,சொல்லாடல்களுமாக வேறுபாடு கண்டுள்ளது.இலக்கியத்திலும், திரைப்படங்கள் போன்ற ஊடகங்களின் வழியாகவும் சில வட்டார வழக்குகள், அவ்வட்டாரத்தைச் சார்ந்த கலைஞர்களின் மூலம் எல்லாருக்கும் ஓரளவாவது தெரிந்திருக்கிறது. ஆனால், சில வட்டாரங்களைச் சார்ந்த வழக்குமொழியும், மக்களும் ஓரளவுக்குகூட அறியப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்.


சேலம், மேட்டூர் போன்ற வட்டாரத்திலுள்ள அசலான கிராம மக்களின் அசலான வட்டார வழக்குமொழியில் எழுதிவருபவர் மு. ஹரிகிருஷ்ணன்.மேட்டூர் அருகேயுள்ள ஏர்வாடி என்கிற கிராமத்தைச் சார்ந்தவர்.அடிப்படை தொழிற்கல்வியை(ஐடிஐ) பயின்று, தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிபவர்.


முப்பது வருடங்களுக்குமுன் நகரத்திற்குக் குடிபெயர்ந்துவிட்ட மனிதருக்கே, இன்றைய கிராம வாழ்க்கை பற்றியும்,இன்னல்கள், மாற்றங்கள் குறித்துத் தெரியவில்லை. நகரங்களிலேயே பிறந்து வளர்ந்த மனிதர்களுக்கு, கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கைமுறையை, அவர்களுக்குள் நிலவும் சாதிப்பாகுபாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் செய்திகளின் வழி மேலோட்டமாகவே உணரத்தகுந்தது.ஆனால், அங்கு நிலவும் பிரச்னைகளின் தீவிரத்தை உணரும் வகையில், சம்பவங்களாக, கதாபாத்திரங்களாக அறிய நேர்கிறபோது , நம்மால் ஆழமாக உணரமுடியும். அதை இவரின் கதைகளில் காணமுடியும்.


ஆழமில்லாத வாசிப்பனுபவத்தோடு இவரின் கதைகளை அணுகும்போது, நகைச்சுவைக்காகவும், பாலியல் கிளுகிளுப்புக்காகவுமே எழுதப்பட்டவைகளோ என்று தோன்றும்.எழுத்தில் காணப்படும் கெட்டவார்த்தைகளும், வெளிப்படைத்தன்மையும் அதிர்ச்சியளிக்கக்கூடும்.வட்டார வழக்கு மொழி பரிச்சயமில்லாதவர்களுக்கு , வாசிப்பில் அயர்ச்சி ஏற்படக்கூடும். ஆனால், தொடர்ந்து ஓரிரண்டு கதைகளைப் படித்துவிடும்போது மொழி பிடிபட்டுவிடும்.இவரின் கதைகளைப் படிக்கும்போது, தரையிலிருந்து பொங்கிவரும் நீரூற்றுப்போல நகைச்சுவை பீறிட்டுவரும்.ஆனால், சில கணங்களுக்குப்பிறகு பெருகும் நீரில் ஊற்று அடங்கிமறைந்து, தண்ணீர் பரவி நிற்பதைப்போல துயரமும், குற்றவுணர்வும் பரவி நிற்கும்.
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைமுறைகள், துயர்கள், ஆதிக்கசாதியினரிடம் பெறும் உழைப்புச் சுரண்டல்கள்,எதேச்சாதிகார ஒடுக்குமுறைகள், அதைக் கட்டுடைக்கும் முன்னேற்றத்தருணங்கள் என அனைத்தும் பதிவாகியிருக்கிறது இவரின் கதைகளில்.திருநங்கைகளைப் பற்றிய கதைகளில் இவர்களின் வாழ்க்கைத் துயரங்கள் , தகவல்களுடன் பதிவுசெய்திருக்கிறார்.இவரின் கதை மாந்தர்களில் கூத்துக்கலையும், கூத்துக்கலைஞர்களும் பரவலாக இடம்பெறுகின்றனர்.தொன்மக்கதைகளும், புராணங்களும் இன்றும் கிராமங்களில் வாய்வழிக்கதைகளாகவும், கூத்துக்கலை போன்ற நமது மரபுக்கலைகளின் வழியாகவும் நிலைப்பெற்றிருக்கிறது.சிதையாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது. தன்னுடைய சிறுகதைத்தொகுப்பான மயில்ராவணன் என்கிற தொகுப்பை , கூத்துக்கலைஞர்களுக்கே அர்ப்பணம் செய்துள்ள ஹரிகிருஷ்ணன், நடைமுறை வாழ்விலும் கூத்துக்கலைஞர்கள் முன்னேற்றத்திற்காகவும்,அங்கீகாரத்திற்காகவும் மிகவும் சிரத்தையுடன் தொண்டாற்றி,.உரிமைக்குரல் எழுப்புகிறார்.தொண்டு அமைப்பை நிறுவி, அதன்மூலம் விருதுகளும், பரிசுகளும் அளித்து ஊக்குவித்து வருகிறார்.
முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு கிராமத்துக்கிழவி கதை சொல்வதுபோல, இவர்கதைகளில் கதைசொல்லியின் சொல்முறையும், அனுபவ ஆழமும் இருக்கிறது.வா.மு.கோமுவை ஆசிரியராககொண்ட இறக்கை இதழின் இணையாசிரியராக இருந்த ஹரிகிருஷ்ணன் இப்போது மணல்வீடு எனும் இருமாத இதழை சிறப்பாக நடத்திவருகிறார்.


2007ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசை, இவரின் மயில்ராவணன் தொகுப்புக்கு, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் வழங்கியுள்ளது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார்.


இவரின் வலைப்பூ மணல்வீடு


மணல் வீடு இரு மாத இதழ்
ஆசிரியர் : மு. ஹரிகிருஷ்ணன்
தொடர்பு மற்றும் வெளியீட்டு முகவரி ( படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி )
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டுர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
அலைபேசி - 98946 05371
மின்னஞ்சல் - manalveedu@gmail.com
manalveeduhari@gmail.com
ஆண்டு சந்தா ரூ. 100
ஐந்தாண்டு சந்தா ரூ. 500
சந்தாவை மணியார்டராக அனுப்பலாம்
அல்லது ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம்.
A/c.No. 611901517766
V.Shanmugapriyan,
ICICI bank, salem shevapet branch

தடாகத்தில் ஹரிகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைகள் :
பாதரவு - மு. ஹரிகிருஷ்ணன்
குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட் - மு.ஹரிகிருஷ்ணன்

நன்றி - தடாகம்

Saturday, January 16, 2010

மக்கள் கலை இலக்கிய விழா- பயண அனுபவம்.


மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஏர்வாடி என்கிற கிராமத்தில் நடைபெற்றது. மணல்வீடு ஆசிரியரும், சிறுகதையாசிரிருமான மு.ஹரிகிருஷ்ணன் மிகவும் ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் நடத்துகிற நிகழ்ச்சி இது. கூத்துக்கலைகளுக்கும்,கூத்துக்கலைஞர்களுக்குமான அங்கீகாரத்திற்கும், மேன்மைக்காகவும் உரிமைக்குரல் எழுப்பிவருவதோடு நின்றுவிடாமல் , தாமாகவே முன் வந்து நிதி திரட்டி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இது.டிசம்பர் 26 மாலை துவங்கி 27 காலைவரை விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சி.

நான் , அகநாழிகை இதழாசிரியர் பொன். வாசுதேவன் மற்றும் யாத்ரா மூவரும் சென்னையில் உயிர்மை புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சங்கமித்து பிறகு சேலம் செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.25-12-09 அன்று நடந்த உயிர்மை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட முடியும்வரை கலந்துகொண்டுவிட்டு இரவு தொடர்வண்டியில் புறப்பட்டோம்.

மறுநாள் காலையில் சேலத்தில் இறங்கி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து , புதிய பேருந்து நிலையம் செல்ல நகரப் பேருந்து பிடித்தோம்.பேருந்தினுள்ளே பார்த்தால் குரங்குத் தொப்பியோடு நண்பர் சுவாமி நாதன்(மயில்ராவணன்) அமர்ந்துகொண்டிருந்தார் .புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகிலேயே உள்ள ஒரு விடுதியாகப் பார்த்து அறை எடுத்து,காலைக்கடன்களை முடித்து அறையில் உற்சாகமாக கொண்டாட்டம், பாடல் என்று நேரம் கடத்தினோம். நண்பகல் உணவை முடித்துக்கொண்டு பேருந்து பிடித்து,சேலம்-மேட்டூர் பேருந்தில் ஏறி பொட்டனேரி என்கிற கிராமத்தில் இறங்கினோம்.அங்கு ஆயத்தமாக ஒரு வண்டி நின்றுகொண்டிருந்தது. அந்த 4 சக்கர வண்டி, எங்களைப் போன்றவர்களை பொட்டனேரியிலிருந்து , ஏர்வாடிக்கு அழைத்துச் செல்வதற்கானது எனபதை அந்த வண்டியைப் பார்த்தவுடனே அறிந்துகொள்ள முடிந்தது. வண்டியின் முகப்பில், விழா விளம்பர தட்டி கட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதிலேறி, சில கிலோமீட்டர்களே தள்ளி அமைந்துள்ள ஏர்வாடி கிராமத்தில் இறங்கும்போது சரியாக மணி பகல் 3.30. முதல் நிகழ்வு தொடங்குவதாக அழைப்பிதழில் இருந்த நேரமும் அதுவே.

image image image image image image

எங்களுக்கு முன் அங்கே சிலர் மட்டுமே வந்திருந்தனர் அதுவரை.க.சி.சிவகுமார்& இயக்குனர் பி.லெனின் அமர்ந்திருந்தனர். நல்ல இருக்கைகளுடனும், பந்தலுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, நிகழ்ச்சி துவங்க நேரமிருப்பதால் மெல்ல விழா நடக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவுவரை ஊர் சுற்ற கிளம்பினோம். கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்ட தீனியை, கட்டிப்போடப்பட்டிருந்த ஆடு மேய்ந்துகொண்டிருந்த காட்சியை அதிசயமாகப் பார்த்துக்கொண்டே நடந்தோம்.image image image image ஒரு கிணற்றுக்குச் சென்று அமர்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். நண்பர் சுவாமிநாதன் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம் எடுக்கிறேன் என்று முயன்றுகொண்டேயிருந்தார். அவர் புகைப்படக்கருவியில் எடுத்த ஆகச்சிறந்த புகைப்படம் நிச்சயம் அவரெடுத்ததாக இருக்காது என்று நம்புகிறேன்.கிணற்றில் ஒரு பாம்பின் தோல் உரித்துப்போடப்பட்டிருந்தது, நீளமாக. கிணற்றுத் தண்ணீரிலும், கரையிலும் கோகோ கோலா போத்தல்களும், பாலிதீன் தாள்களும், சரக்கு போத்தல்களும் கிடந்தன. கிராமம் வரை ஆட்சி செய்துகொண்டிருந்த நவீனத்தின் கொடுமையை எண்ணிக்கொண்டேன்.இரண்டு சிறுவர்கள் மூங்கில் குச்சியை வெட்டி, சீராக்கி எடுத்துக்கொண்டு நடந்துவந்தார்கள். மீன் பிடிக்கவாம். மூங்கில் குச்சிகளின் பச்சை இன்னும் என் கண்ணில் பளீரென உறைந்து நிற்கிறது.அவர்களை அருகிலிருந்த சமாதியின் மேல் உட்காரச் சொல்லி, புகைப்படம் எடுக்கக் கேட்டோம். 'சவுனி மேல உட்காரக்கூடாது' என்றார்கள். சற்று நேரத்திற்குமுன் நாங்கள் அதன் மீதுதான் உட்கார்ந்திருந்தோம்.சமாதியைத்தான் சவுனி என்பார்கள் என்பது ஹரிகிருஷ்ணனின் மயில்ராவணன் தொகுப்புப் படித்திருந்தபோதே தெரிந்திருந்ததால் ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை. பின், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தோம்.

நண்பர் இலக்குவண் மடக்கி மடக்கிப் புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். சேரல் வந்து சேர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த லக்‌ஷ்மி சரவணகுமார் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி தொடங்கியது. நாங்கள் எதிர்பாராதவிதமாக பாவண்ணன் வந்திருந்தார். கூத்துப்பார்க்கும் ஆர்வத்திலேயே வந்திருந்ததாக தன்னுரையில் சொன்னார்.கூத்துக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது.ஒவ்வொருவரையும் ஹரி அறிமுகப்படுத்தி, (மூன்று வருடங்களாக தேடி அலைந்து கண்டுபிடித்திருக்கிறார்.சிலர் இறந்தேபோய்விட்டிருக்கிறார்கள்.)அவர்களின் கூத்துப்பாத்திரங்களையும், சிறப்புகளையும் சொல்லிக்கொண்டிருந்தார். நினைவுப்பரிசும், சான்றிதழும் ஒவ்வொருவராகப் பெற்றுக்கொண்டு , தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறிய அளவில் நிகழ்த்துக்கலைகளைச் செய்தனர். ஒலிப்பெருக்கியே இல்லாமல் உரத்தக்குரலில் பாடும் திறன்பெற்றிருந்தனர்.வெள்ளந்தியான அந்தக் கலைஞர்கள் தயக்கத்துடனும், நெகிழ்ச்சியுடனும் பாராட்டும் பரிசும் பெறும்போது எனக்கும் நெகிழ்ச்சியாகி கண்களில் நீர் திரண்டது.இதை நான் வெட்கத்துடன் மறைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்படியும் நண்பர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு சிரித்தனர். பெண்கலைஞர்களும் பாராட்டுப் பெறும்போதுதான் தெரிந்தது, பெண்களூம் இதில் கலந்துகொள்வார்கள் என்ற உண்மையே.சுமார் 35 கிலோ எடைகொண்ட பொம்மைகளை தூக்கி, அசைத்து பொம்மல்லாட்ட நிகழ்ச்சி நடத்தும் வயதான பெண்மணி மேடையில் மிகவும் அமைதியாகவும், தயக்கத்துடனும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.பெண்கள் மேளம் அடிக்கவும் செய்வார்களாம்.

image image image image

பொதுவாகவே தெருக்கூத்து என்கிற நிகழ்த்துக்கலை வடிவம் தமிழ் நாட்டில் வட பகுதிகளில் மிகுதியாகவும், மேற்குப்பகுதியிலுமே உள்ளது. தென் தமிழ் நாட்டில் நானறிந்தவரை இல்லையென்றே அறிந்திருக்கிறேன்.மாலை தேனீர், இரவு உணவு எல்லாம் நடந்தேறியது. இரவு பொம்மலாட்ட நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் மதுரை வீரன் கூத்தும் நடைபெற்றது. நான் நிகழ்ச்சியைப் பார்க்காமல் சற்றுத்தள்ளியிருந்த ஒரு மரத்தடியில் நண்பர்களுடன் 'கூத்து'ம், கும்மாளமுமாக இருந்தோம். சேரல்தான் வழக்கம்போல் நிகழ்ச்சிகளை முழுக்க பொறுப்பாகப் பார்த்து ரசித்தவர். வா.மு.கோமு வந்து சேர்ந்தார் தாமதமாக.தலைக்கவசம் அணியாததால்,வழியில் காவலர்களின் கடமையுணர்வுக்குக் கட்டுப்பட்டு நிறைய இடங்களில் சிக்கிக்கொண்டு , வந்து சேர்ந்த கதையைச் சொன்னார்.(அடுத்து இதை வைத்து ஒரு கதை இருக்குமோ?). வா.மு.கோமுவுடன் பழக நேர்ந்த இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. மனிதர் நேரிலும் கவர்ந்துவிட்டார். இரவு, அவருடன் ஒரு சிறிய நேரகாணல் நடத்தினேன். பொறுமையிழக்கச் செய்யும் கேள்விகளுக்கும் நிதானமாக பதிலுரைத்துக்கொண்டிருந்த பக்குவம் பாராட்டுக்குரியது.

image image image

ஓரளவு கொங்குவட்டார படைப்பாளிகள் முழுக்கவே வந்திருந்தனர் என்று சொல்லும் அளவுக்கு இருந்தனர். படைப்பாளிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களை பட்டியலிடுகிறேன்.
இசை,இளவேனில், இளஞ்சேரல்(மூவரும் ஒரே ஊர்க்காரர்கள்), நரன்,தூரன்குணா,ஆதிரன்,ஜெகன்னாதன்(வலைப்பதிவர்),ஊர்சுளா ராகவ்(யவனிகா ஸ்ரீராமின் மகன்),மணிவண்ணன், மயூரா ரத்தினசாமி, ந.பெரியசாமி, அகச்சேரன், சாஹிப்கிரான்,வே.பாபு, ஸ்னேகிதன் மற்றும் சில நண்பர்கள். கவிதாயினி சக்திஅருளானந்தம் மற்றும் சில பெண்கள் இருந்தனர். அவர்களில் வலைப்பதிவர்களோ, படைப்பாளிகளோ நிச்சயம் இருக்கக்கூடும்.

விழாவின் சிறப்பு விருந்தினர்கள் பாவண்ணன்,நாஞ்சில் நாடன், இயக்குனர் லெனின், க.சீ.சிவக்குமார், கே.ஏ.குணசேகரன் மற்றும் ஒரு உயரதிகாரி.( நாட்டுப்புறக்கலைஞர்களூக்கான துறைபோன்றது)

 

பின்னிரவில் மதுரைவீரன், நிகழ்ச்சி நடந்த மேடைக்கு சற்றுத்தள்ளீயிருந்த இடத்திலிருந்து , முதுகில் கட்டப்பட்டு கொளுத்தப்பட்ட நெருப்புப் பந்தங்களுடன் ஆவேசமாக ஆடிக்கொண்டும், உரக்கக் கத்திக்கொண்டும் கம்பீரமாக வந்துகொண்டிருந்த காட்சி நிகழ்ச்சியில் தலையாயது.மக்கள் மிகுந்த பக்தியோடும், பரவசத்தோடும், அச்சத்தோடும் கைகூப்பி வணங்கினர்.சிறுவர்கள் விலகி ஓடினர். மதுரைவீரன் ஒரு சேவலை உயிரோடு தலையைக் கடித்துத் துப்பினார். மேளச்சத்தமும் ஆரவாரமும் உச்சத்தில் ஒலித்தது. கலைஞர் எலிமேடு மகாலிங்கம்தான் வழக்கமாக இதைச்செய்வாராம்.அவர் அண்மையில் மறைந்துபோனார் என்பதால் இப்போது அவரின் தம்பியே மதுரைவீரன் வேடமிட்டிருந்தார்.

மதுரைவீரனின் தீப்பந்த வெளிச்சத்தை விழுங்குவதுபோல் மின்விளக்குகள் இருந்த இந்த நவீன காலத்தை நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, கம்பீரமான மதுரைவீரன் ஒரு இடத்தில் குனிந்து செல்லவேண்டியதாகயிருந்தது. அது மின்சார கேபிள். இன்றைய நவீன வாழ்வு கூத்துக்கலைஞர்களை வைத்திருக்கும் நிலை இதுதான் என்ற படிமம்போல் அமைந்திருந்தது அது.

(புகைப்படங்களை எடுத்தனுப்பிய ஆகச்சிறந்த புகைப்படக்கலைஞர் சுவாமினாதனுக்கு நன்றி.)

Friday, January 1, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-அனிதா


 
என் பார்வையில் படைப்பாளிகள்
 
கவிஞர் அனிதா
 
கனவு கலையாத கடற்கன்னி என்னும் முதல் தொகுப்பின் மூலம் நன்கு கவனம் பெற்றிருப்பவர் அனிதா.எப்போதோ படித்த ஒரு கவிதையின் உள்ளடக்கமோ, சாரமோ கூட மறந்துபோயிருக்கக்கூடியவொரு சூழலில் , அந்தக் கவிதையின் சிறப்பான ஒரு சில வரிகளோ, வர்ணனையோ, வார்த்தையலங்காரங்களோ நெஞ்சிலிருந்து அகலாமல் நிலைத்திருக்கக்கூடும். அவ்வாறான, தனித்துவமான  கவித்துவம் கொண்ட கவிதைகளை , உள்ளடக்கத்தின் வலுவோடும்கூட எழுதியிருக்கிறார், அனிதா.

மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தம், அழகான பொய் இவையே கவித்துவம் என்பதாக புரிந்துவைத்துக்கொண்டிருந்த எனக்கு,

/கல்லெடுத்து தண்ணீர்க் குழிகள்
பறித்துக்கொண்டிருந்தவன் மேல்/

என்கிற கவிதை வரிகளில் காணப்படுகிற  மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தமுமில்லாமல், அழகிய பொய்யாகவும் இல்லாமல்  அமைந்துள்ள கவித்துவம் எனக்குப் புதியதொரு உணர்தலை அளித்தது.

தன்வயப்பட்ட அனுபவங்களிலிருந்தும், அந்தரங்க உணர்வுகளிலிருந்தும் உந்தப்பட்டு இவர் எழுதியிருக்கும் கவிதைகள்,பொதுவான மானுட வாழ்விற்கும் பொதுவானதாயுள்ளது.

/உன்னிடம் ஏன் சொல்கிறேனெனத் தெரியவில்லை
சொல்லவேண்டுமெனத் தோன்றுகிறது
சொல்கிறேன்/

என்று இவரே எழுதியிருக்கும் கவிதை வரிகளைப்போல், பகிர்தலுக்கு முக்கியத்துவமில்லாத சில உணர்வுகளையும், அனுபவங்களையும் கூட பதிவு செய்திருக்கிறார். அம் மாதிரியான உணர்வுகளை இப்படித்தான் மனம் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும்.ஒரு பெண்ணின் அக உணர்வுகளை , இவர் தன் கவிதைகளில் நுட்பமாகப் பதிந்திருப்பதன் மூலம், ஆண் வாசகர்களுக்கும்  அவற்றை அறிந்துகொள்ள ஏதுவாகிறது. பெரும்பாலான கவிதைகளைப் படிக்குமுடிக்குந்தோறும், நம் மனக்கண் முன் ஒரு புகைப்படம்போல, ஒரு காட்சி விரிகிறது. இக் காட்சியை கவிதை வரிகள் விளக்கிக்கொண்டிராமல், தன்னகத்தே ஒளித்துவைத்திருக்கிறது.பொதுவில் சொல்லத்தயங்கும் அந்தரங்க அனுபவங்களையும், மனதின் புதிர்ப்போக்குகளையும் கூட  வெளிப்படையாக எழுதுகிறார்.புதிர்களை விடுவிக்கும் ஒரு சாகச மன நிலையை, மகிழ்ச்சியை  இவர் கவிதைகளைப் படித்துப் புரிந்துகொள்ளும்போது அடையமுடிகிறது. இந்தப் புதிரை அடையும் வகையில்  எளிமையோடே எழுதியிருக்கிறார். தனிமை குறித்த கவிதைகளும் தென்படுகிறது. பயண நேரங்களில் இவர் நிறைய கவிதைகளை அவதானித்து எழுதியிருக்கிறார்.

கவிதை வரிகளை  எங்கு முடிப்பது, எங்கே வெட்டிப் பிரிப்பது என்பதுபோன்ற கட்டமைப்பில் இவர் சிறிது கவனம் செலுத்தி,எளிமைப்படுத்தினால் வாசிப்பில் சரளத்தன்மையும், நெருக்கமும் கூடிவரும்.

உதாரணமாக,


/தனிமையை குழந்தைகளின் வெளிச்சத்தில் கரைத்துக்கொண்டிருந்த
கால் படாத புற்பரப்புகளைக் கடக்கையில்
அவனைக் கவனித்தேன்/

என்கிற வரிகளை

/தனிமையை

குழந்தைகளின் வெளிச்சத்தில் கரைத்துக்கொண்டிருந்த
கால் படாத புற்பரப்புகளைக்
கடக்கையில்
அவனைக் கவனித்தேன்/

என்று எழுதலாம்.மாதிரிக்கு இடுகிற சில கவிதைகளை தேர்ந்தெடுக்க முயலும்போது தடுமாற்றம் ஏற்படும் வகையில் நிறைய நல்லக் கவிதைகளை இத்தொகுப்பில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

1980 ல் செனையில் பிறந்தார்.தகவல் தொழில் நுட்பத்துறையில் தற்சமயம் பெங்களூரில் பணியாற்றுகிறார். நம்பிக்கைக்குரிய இளம் கவிஞர்களில் ஒருவராக அடையாளப்படும் இவரது கவிதைகள் பிரபல வணிக மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. இது இவரின் முதல் தொகுப்பு.


நூலின் மதிப்புரையில் அமைந்துள்ள வரிகள்..,

”வரையறுக்கபட்ட தனது வெளிகளுக்குள் தனது அந்தரங்கமான பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்ளும் அனிதாவின் இக்கவிதைகள் வாழ்வின் சிடுக்கான கணங்களை நிம்மதியின்மையுடன் எதிர்கொள்கின்றன. அன்றாட வாழ்வின், உறவுகளின் புதிர் மிகுந்த தருணங்களை கடந்துசெல்லும்போது ஏற்படும் பரவசங்களும் பதட்டங்களும் இயல்பாக பதிவாகும் இக்கவிதைகள் தனிமையின் இறுக்கம் நிரம்பியவை. இது அனிதாவின் முதல் தொகுப்பு

இவரின் வலைப்பூ முகவரி இதழ்கள் (http://idhazhgal.blogspot.com/)

கனவு கலையாத கடற்கன்னி தொகுப்பிலிருந்து சில கவிதைகள்




நினைக்காத வேறொன்று

எல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.
புதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,
வேர்க்கடலை, அவித்த சோளமென
நினைத்ததெல்லாம் வாங்கிவிட்டோம்.
பேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து
சிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து
வீடு திரும்பியதும் கவனித்தேன்
வாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.

ஹோட்டலில் தான் தவறவிட்டிருக்கவேண்டும்.
தொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி
இல்லையேம்மா என்றார்.
தோசை சுடுபரும், காபி ஆற்றுபரும்,
பார்சல் ட்டுபரும் கூடி பேசியடியிருந்தார்கள்

கிடைக்கவேண்டுமென்று இருந்தால் கிடைக்குமென
நினைத்தடி வந்துவிட்டேன்.
ம்பாஷணைகளில் கலந்துக்கொள்ளாமல்
மேஜை துடைத்துக் கொண்டிருந்தன்
அன்றிரவு வில் வந்தான்.

கற்பு...

இரவு நேர பேருந்து பயணத்தின்
அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...

காமமும் கோபமும்
ஒருசேர கிளர்ந்தெழ,

வருடலின் சுகம் மீறியும்
"பளாரென" அறைகிறேன்...

என் வருகையை
எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்-

கணவன் முகம் நினைத்து...

ஒற்றை ரோஜா...

விடுதி அறையை சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக்கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா.

எனக்குமுன் இருந்தவரோ
அதற்குமுன் இருந்தவரோ
யாருடையதாகவும் இருக்கலாம்.

ந்ததா றுத்ததா எனத் தெரியாதட்சத்தில்
ல்விலக்கி தூசு அகற்றி சுவரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்தரும் பெற்றரும்
இன்னும் பிரியாமல் இருக்கவும் கூடும்.

என் க்கள்

விளம்பப் கைகளை
வாய் பிளந்து வெறித்தடி ர்கிறது
இந்தழைப்பம்

கூரைத் தொட்டு துருக்கம்பிகளில் ழிந்து
தொடைநனைக்கும்
ன்னலோர ஈரம் உதடு சுழிக்கச்செய்கிறது

மிகமெல்லியஇசையாலும் குறைக்க
முடியவில்லை
அகண்டதோள் சாய்ந்து ழை சிக்கும்
முன்னிருப்பள் மீதானதுவேஷத்தை

ச்சீட்டை மோதிரஇடுக்கில் சொருகி
இருந்தளின்
ட்டைச்சரிகைக்கு பொருந்தாத
நிறக்கவைப்பற்றி
சொல்லலாமென்றிருந்தபோது

ற்சூடு அடங்காத குறுகியத்
தெருமுனையில்
லுங்காமல் இறக்கிவிட்டு
ற்றங்களின்றி ணிக்கிறார்கள்
இத்தனை நேரமும் னிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த

என் க்கள்

குளத்துப் பறவை


தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன
வெள்ளைப் வைகள்
ல்லெடுத்துத் ண்ணீர் குழிகள் றித்துக்கொண்டிருந்தன் மேல்
எச்சம் ழித்து ந்தது இன்னுமொன்று.
ஏதோ அதனாலியன்றது.

காட்டுக்கு சொந்தக்காரன்
உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள் பச்சை நிறமாயின

பழுப்படைந்த இறகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்

காடறுக்க வந்தவனை மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்

இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்

இருந்தும் சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்

நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதப்போவதில்லை
உனக்கான கவிதைகளை

 நன்றி - தடாகம்