Saturday, December 12, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்
ilango
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்
காலச்சுவடு வெளியீடான காயசண்டிகை என்கிற கவிதைத்தொகுப்பின் மூலம் அறிமுகமாகியிருக்கும் கவிஞர் இளங்கோகிருஷ்ணன் , இன்றைய இளம் கவிஞர்களுள் மிகவும் குறிப்பிடத்தகுந்த சிறந்த கவிஞர். இவர் தம் கவிதைகளைப் புனைவிலேற்றி, படிமமாக்கி எழுதுகிறார். புனைவு என்பது ஒரு படைப்புக்கு எந்தளவுக்கு இயல்பாகப் பொருந்தமுடியுமோ அந்தளவுக்கு எழுதுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், கூடுதல் சுவையையும் அளிக்கிறது.அந்த வகையில் இளங்கோகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளில் காணப்படும் புனைவு இயல்பானதாகவும், பொருத்தமாகவும் , பன்முகத்தமைக்கு இட்டுச்செல்லும் வகையிலும் அமைந்துள்ளது.நேரடியான உரை நடைத்தன்மை கொண்ட எளிய கவிதைகளும் எழுதுகிறார்.தனித்த நுண்கதைகளைப் போலிருக்கும் இவரின் கவிதைகள் வாசித்து உள்வாங்கியதும் பன்முகத்தன்மையோடு பல்கிப்பெருகக்கூடியதாக உள்ளது. வாழ்தலின் சலிப்பை,துயரை, இயலாமைகளை எழுதுகிறார்.சுய விருப்பங்களை தொலைத்த நிர்ப்பந்த வாழ்வில் ,ஆட்டத்தின் விதிகளை அறியாத சூதாட்டக்காய்களைப் போன்ற நிலையை எழுதுகிறார்.அவலங்களுக்கு எதிராக பிரச்சார தொனியில் எழுதிக்கொண்டிராமல் , சீறிப்பாயாமல், நைச்சியமாக கேலி பண்ணும் புத்திசாலித்தனம் கொண்டவை இவர் கவிதைகள்.எதிர்த்தன்மையைக் கொண்டதுபோல் எழுதப்படும் இவர்தம் கவிதைகளில் கவிஞரின் குரல் கவிதைக்குள்ளாக ஒளிந்துகொண்டிருப்பது. காலங்காலமாக நிலவிவரும் சமூக அவலம் முதல் இன்றைய சமூக,அரசியல் அவலங்கள், நிகழ்வுகள் வரைக்கும் மறைமுகமாகக் குறிப்புணர்த்துகிறது இவர்தம் சில கவிதைகள்.

ஒரு தொகுப்பில் ஐந்தாறு கவிதைகள் நன்றாக அமைந்து இருந்தாலே போதும், அத்தொகுப்பு வெற்றிபெற்றதாக எண்ணலாம் என்றொரு கருத்து உண்டு. ஆனால், இவரின் தொகுப்பான காயசண்டிகையில் நம்மால் ஐந்தாறு கவிதைகளைக்கூட ஒதுக்கித்தள்ளிவிட முடியாத அளவுக்கு அத்தனைக் கவிதைகளும் சிறப்பானது.முதல்தொகுப்பான காயசண்டிகையிலேயே முதிர்ந்த மொழிவளமும், கச்சிதமான வடிவமைப்பும், புதிய உத்திகளும் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். உரை நடை வடிலும், பத்தி வடிவிலும் சில கவிதைகளும் எழுதியிருக்கும் இவர், சிறுகதைகள் மற்றும் நுண்கதைகள் , மொழிபெயர்ப்புகள் ஆகியனவும் எழுதிவருகிறார்

காயசண்டிகை தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மதிப்புரை:

‘இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.பொதுவாக இவரது கவிதைகளின் மையச்சரடு,ஆட்டத்தின் விதிகளை அறியாத’சூதாட்டத்தின் காய்களை’ப்போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல்.எனினும்,தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல்.காலம்,சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல். உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்’

இயற்பெயர் பா.இளங்கோவன். வரி ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.கோவையைச் சார்ந்தவர். இவரின் வலைப்பூ.

காயசண்டிகத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

ஒரு சாத்தானின் டைரிக்குறிப்புகள்


இன்று காலை கழிப்பறையில்
ஒரு கரப்பானுக்கு ஜலசமாதி தந்தேன்
பின்
பலவீனமான வலுவற்றயென்
கரங்களால்
ஒரு செடியைப் பிடுங்கி எறிந்தேன் காரணமின்றி
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான்
வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டு வீசுபவர்கள்
பாக்யவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது
பொருளும் அதிகாரமுமற்ற
சாமானியன் என்ன செய்ய முடியும்
ஒரு கரப்பானையோ
சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி

பேனா-1

மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில்
தலையில் பலத்த அடிபட்டுப்
பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
அதைக்கொண்டு
காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்றபோது
அது பசியின் கொடூரத்தையும்
வறியவன் இயலாமையையும் எழுதியது
வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது
கலவரங்களின் பீதியையும் உயிரின் வலிமையையும் எழுதியது
கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது
மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது
கலைகளின் மேன்மையை எழுதப் பார்த்தபோது
தேசங்களின் பகைமையையும் ஆயுதங்களின் மூர்க்கத்தையும் எழுதியது
மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான
தீர்வுகளை எழுத முயன்றபோது
அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது

ஊழியம் கம்பெனி (பி) லிமிடெட்


நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு
அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்
ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன
நீங்கள் பயன்படுத்த வேண்டிய
சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன
இப்போதே பணியைத் துவக்குங்கள்
இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்
கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்
அதென்ன தூரிகையா
பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்
நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே
பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்
சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட.

கதவு

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்

நன்றி - தடாகம்
Thadagam_Logo_Eng

3 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான அர்த்தமுள்ள கவிதைகள்.வலைப்பூவை அறியத்தந்தமைக்கு நன்றி.

கமலேஷ் said...

மிகவும் நன்றி முத்துவேல்...
கவிஞர் இளங்கோ அவர்களின் சில கவிதைகளை யாத்ராவின்
வலைத்தளத்தில் கண்டுள்ளேன் அவரை பற்றிய தேடல் என்னிடம் இருந்தது..அவருடைய வலை பூவையும் அவரையும் அருமையாக படிதியதர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி...

யாத்ரா said...

நல்ல அவதானம் முத்து, தொகுப்பு குறித்து, இளங்கோ எனக்கும் மிகப் பிடித்தமானவர்